Monday, February 19, 2018

கட்டபொம்மனும் இந்துத்துவர்களும். தமிழ் விரோதியான ஜெயகாந்தன்

மொழியும் அது சார்ந்த கலாசாரத்தையும் வைத்து அரசியலும் வியாபாரமும் செய்தவர்கள் திராவிட இயக்கத்தினர். அதை அப்படியே அட்சரம் பிசகாமல் இந்து மதமும் அது சார்ந்த கலாசாரத்தையும் வைத்துச் செய்பவர்கள் இந்துத்துவர்கள். இந்துத்துவர்களின் வழி முறைகள் எல்லாம் திராவிட இயக்கத்தினருடையது. திராவிட இயக்கத்தினரே இந்துத்துவர்களின் ஆசான்கள்.

இந்திய மரபில் வரலாற்றை எழுதும், விவாதிக்கும் வழக்கம் சமீபத்திய காலம் வரை இல்லை. சமகால அரசியல், சமூகம், தங்களுக்கு முந்தைய சமூகங்கள், போர்கள் பற்றி விரிவாக வரலாற்றுத் தன்மையோடு எழுதிய கிரேக்க-ரோமானிய மரபு நமக்கில்லை என்று சொன்னதும் இந்துத்துவர் ஒருவர் வெகுண்டெழுந்து விட்டார். இது ஐரோப்பிய மயமான பார்வை என்றார். அப்புறம் இது கிரிஸ்தவ மனப்பான்மை என்றார். இந்துத்துவர் இல்லையா!! நாத்திக பிராமண எழுத்தாளரை எதிர்ப்பதென்றால் திமுகவினர் ஆரம்பிப்பதே "பார்ப்பான்" என்பதில் தான். தமிழ் இந்துத்துவர்களின் மூலவர் கோபாலபுரத்தில் இருக்கிறார்.



முத்தமிழ், முத்தமிழ் என்று திராவிட இயக்கம் முழங்கிய போது தமிழில் நாடக இலக்கியம் என்று சொல்லத் தக்க எதுவுமில்லை என்றார் ஜெயகாந்தன். டென்னஸி வில்லியம்ஸ், பெர்னார்ட் ஷா போன்றவர்களின் படைப்புகள் போல் தமிழில் இல்லை என்றார். சிலப்பதிகாரம் நாடக இலக்கியம் இல்லை, மனோன்மணீயம் ஒரு மூன்றாந்தரப் படைப்பின் நாலாந்தரத் தழுவல் என்றார்.

பின்னர் ஞானபீடம் கிடைத்த போது தமிழ், தமிழ் என்று பிதற்றுபவர்கள் பற்றி "தம்மைத் தாமே நக்கிக் கொள்ளும் நாய்கள்" என்றார். உடனே திராவிடச் சிங்கங்கள் சீறியெழுந்து 'தமிழ் விரோதி ஜெயகாந்தன்' என்று கூப்பாடு போட்டார்கள். அதற்கும் பதில் சொன்னார் பின்னர் ஒரு விழாவில். தம்மைத் தாமே நக்கிக் கொள்ளும் மிருகப் பண்பை ஒத்தது தாம் சார்ந்த ஒன்றைப் பற்றியே பெருமையாகப் பேசுவது என்று தெளிவுப் படுத்தினார். "என் மொழியையே நேசிப்பது, என் மொழியையே போற்றுவது...மானுட இயல்பாக இல்லையே...சரி தம்மைத் தாமே நக்கிக் கொள்ளும் சிங்கத்தைப் போல என்று வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.



முன்பொரு முறை பெட்னா சிறப்பிதழுக்காக எழுதிய 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும்' என்ற கட்டுரையில் தமிழ்ச் சூழலில் இல்லாதவைகள் பற்றி எழுதினேன். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மிக மலிவுப் பதிப்புகளாக அதே நேரம் தரமானதாக ஃபோல்ஜர் பதிப்பகம் வெளிக்கொண்டு வரும். நம் தமிழ் இலக்கியப் பதிப்புகள் அதன் அருகில் கூட வர முடியாது. ஆங்கில இலக்கணம், எப்படி எழுதுவது என்பது பற்றி 20 நல்ல நூல்களைச் சொல்லலாம் ஆனால் தமிழில் அப்படிச் சொல்ல முடியாதே. இப்படியாகப் பட்டியலிட்டேன். நாம் உரைநடை இலக்கியத்தின் குழந்தைப் பருவத்தில் இருந்த போதே ஸின்க்ளேர் லூயிஸின் 'Arrowsmith', 'Main Street', ஆகியவை வெளிவந்துவிட்டன.

இந்துத்துவர் கொந்தளிக்கிறார் பாரதி எட்டுத் திக்குக்கும் போகச் சொன்னது அங்குள்ள சிறந்தவைகளை கொண்டு வாருங்கள் என்பது தான் இங்கு வரலாற்றறிவு இல்லை என்பதல்ல என்றார்.

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

முழுவதுமாகப் படித்துப் பாருங்கள். இங்கு இருப்பதை மேன்மையுறச் செய்வதற்காக் இன்னும் கொஞ்சம் கொண்டு வாருங்கள் என்று பாரதிச் சொல்லவில்லை. "புத்தம் புதிய கலைகள்". மேலும் பல இடங்களில் பாரதி மேற்கே வளரும் விஞ்ஞானம் தமிழில் வர வேண்டும் என்று விரும்பி விஞ்ஞான முன்னேற்றங்கள் எங்கே நடந்தாலும் அதைப் பற்றித் தன் பத்திரிக்கையில் உடனே எழுதினான். ஜகதீஷ் சந்திர போஸின் விஞ்ஞானம் பற்றி ஆற்றிய உரையைத் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டான்.

எட்டுத் திக்கும் செல்லுங்கள் என்பதற்கு அர்த்தம் இருப்பதை மேன்மைப் படுத்துவது மட்டும் குறிக்கோள் அல்ல. நம்மிடம் இல்லாததையும் கொண்டு வந்து சேர்ப்பது தான் குறிக்கோள். அதற்கு நம்மிடம் என்ன இல்லை என்ற ஞானம் கொஞ்சமாவது வேண்டும்.

ஆனால் இந்துத்துவர்கள் கட்டபொம்மன் சிவாஜி மாதிரி வசனம் பேசுகிறார்கள். ஜாக்ஸன் துரையிடன் சிவாஜி நரம்பு புடைக்க, கண்கள் சிவக்க, கண்ணமும் மீசையும் துடிக்க, "கற்றுக் கொடுக்கும் இனம் தமிழ் இனம் எங்களுக்குக் கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம்" என்பார்.

நமக்கு ஷ்ரோடிங்கர் இந்திய மரபில் இருந்து கற்றார், அதோ அவர், இதோ இவர் என்று பட்டியலிடுவதில் இருக்கும் அற்ப சந்தோஷம் அலாதியானது ஆனால் நாம் பிறரிடம் இருந்து கற்கலாமே என்றாலோ 'தமிழ் விரோதி', 'இந்து விரோதி', 'இந்திய விரோதி' பட்டங்கள் தான் கிடைக்கும். போய்க் கொஞ்சமாவது சிஸரோ, செனிகா போன்றவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு வாருங்கள்.

இந்தியர்களுக்கு 'sense of history' கொஞ்சம் கம்மி. அதனால் தான் நிகழ்வுகளைப் பதிவு செய்வது, வரலாற்றுத் தருணங்களை ஆவணப் படுத்துவது, வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது, வரலாற்றாய்வி என்பதெல்லாம் இன்னும் உலக வழக்கில் இருந்து பின் தங்கியே இருக்கிறது. இதை ஒப்புக் கொண்டு ஆவணச் செய்தால் நலம்.

மொழியை வைத்து வியாபரமும் அரசியலும் மட்டுமே செய்தவர்கள் திராவிட இயக்கத்தினர். தமிழுக்கு அவர்கள் தரப்பில் இருந்து பங்காற்றியவர்கள் மிக மிகச் சொற்பம் அதுவும் தரமானதா என்றால் தெரியாது. அதே தான் இந்துத்துவர்களும். அவர்கள் தரப்பில் இருந்து இன்று வரை அறிவுத் தளத்தில் எதைச் செய்தார்கள் என்றுப் பட்டியலிட்டால் ஏமாற்றமே.


2 comments:

வன்பாக்கம் விஜயராகவன் said...

much to agree

Unknown said...

சுட்டிக்காட்டியிருப்பது தமிழனின் (இந்தியனின் ) அவலமான நிலைமை